Montag, Dezember 21, 2009

தேவதாசன்,டன் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி...

தேவதாசன்,டன் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி...
 
-"காண்பதிலுள்ள காணாததைக் காண்போம்"
 
லங்கைத் தலித் சமூக மேம்பாட்டு முன்னணியின் தலைவர் தேவதாசன் இலங்கையிலிருந்து ஒளிபரப்பாகும் டன் தொலைக்காட்சிக்கு ஒரு நேர்முகப் பேட்டியளித்திருக்கிறார்.நாம் அதைப் பார்க்கக் கூடியதாக இன்று 20.12.09 ஒளிபரப்பினார்கள்.இப் பேட்டியில், தேவதாசனின் கருத்துக்களோடு-பல விதத்திலும்-தாழ்தப்பட்ட மக்கள்சார் நலத்துடன்-நாம் ஒத்துப்போகும் கோரிக்கைகளையும்,கடந்தகாலப் புறக்கணிப்புகளையும் குறித்துத் தேவதாசன் உரையாடினார்.அதன் தர்க்கத்தில் முரண்பட வேண்டுமென்றில்லை.இலங்கையில் ,அதுவும் யாழ்ப்பாணச் சாதிய அமைப்பு முறையில் ஏற்படும் வடு அவரது கருத்தின் நியாயத்தைக் குறைக்கவில்லை.அது, எம்மால் பல தளத்தில் ஏற்கப்பட்டிருக்கிறது.
 
பொதுவாகச் சாதிய ஒடுக்குமுறைக்கெதிராகவும்,இன்று தாழ்த்தப்பட்ட அந்த மக்களது சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்காகவும் அவர்கள் தம்மைத் தகவமைத்துப் போராடுவது அவசியமே.அதற்காக அவர்கள் ஒரு அடையாளத்தை"தலித்து"என்று ஏற்றுக்கொண்டு,அதன்வழி இலங்கையில்-யாழ்ப்பாண மாவட்டத்தில் சாதியம் துப்பாக்கி நிழலில் மறைக்கப்பட்டதென்றும் ,இப்போது சாதியம் அதன் குணத்தை மேலும் வலுவாக்கி வருவாதகாவும் ஏற்றுப் போராடுகிறதற்கான தெரிவுகளில், தாழ்த்தப்பட்ட மக்கள்சார்பாக சபைகள்,கழகங்கள்,முன்னணிகள் அமைக்கிறார்கள்.அது நியாயமும்கூட.
 
யாழ்ப்பாணியச் சமுதாயத்தின் சாதியவொடுக்குமுறைக்கெதிரான போராட்டத்துக்கு"தலித்து"எனும் சாதி ரீதியாக ஓடுக்கப்பட்டவர்களுக்கான அடையாளங்கொண்டு போராட வேண்டுமென்று தீர்மானித்துள்ள தேவதாசன், இன்றைய பேட்டியில் தலித்துவ மக்களுக்கான குரலைத் தாண்டியும் பொதுவான அனைத்துச் சாதிகளையும் உள்ளடக்கிய தமிழ் இனத்தின் பிரச்சனைக்கும் தீர்வொன்றைச் சொன்னார்.அவரது அக் கருத்தின் மூலமாக எனக்குள் கேள்விகள் எழுகிறது.அவை எனது நியாயத்தில் தேவதாசன் கொண்டிருக்கும் அரசியலின் போக்குகளை மதிப்பீடு செய்வதற்கு முனைகிறது.
 
தமிழ்நாட்டின் தலித்துவ முன்னணிகள்-கட்சிகள் எங்ஙனம் ஒடுக்கு முறையாளர்களோடு தோழமைகொண்டு,அவர்களும் அதன் உறுப்புகளானார்கள் என்பதற்கு, நமக்கு விடுதலைச் சிறுத்தைகள் திருமாவளவன் நல்ல உதாரணம்.அவ் வகையுள், தேவதாசன் தலைமையில் கட்டப்பட்ட தலித் சமூக மேம்பாட்டு முன்னணிக்கும் ஒடுக்குமுறையாளர்களோடு சமரசம் நிலவுகிறதென்று இப்பேட்டியின் வழி அவர் சொல்லிச் செல்கிறார்.
 
சாதிய ஒடுக்குமுறையென்பதை உடைத்து, அம் மக்களுக்குச் சம அந்தஸ்த்தைப் பெறுவதற்குத் தலித்து எனும் அடையாளமும்,சாதிகள் குறித்த அடையாளமும், இப்போதும் அவருக்கு அவசியப்படும்போது தேவதாசன் அதைத் தமிழ்த்தேசிய இனத்தின் பிரச்சனையில் பொருத்தத் தவறிவிடுகிறார்(தமிழ்த் தேசிய இனம் என்ற ஒன்றில்லையோ?).
 
இலங்கையில், தமிழ்பேசும் மக்களது பிரச்சனைகளுக்குத் தமிழ்பேசும் மக்கள் "இலங்கையர்" என்ற பதத்தின்மூலம் நாட்டை முன்னேற்றும்படி அறைகூவலிடுகிறார்.நாட்டைத்தான் சொல்கிறார்(அந்த நாட்டுக்குள் ஒடுக்கப்படும் சிறுபான்மை இனங்கள் குறித்து "இலங்கையர்கள்" என்றவுடன் அவர்களது பிரச்சனை தீர்கிறது).
 
நல்லது!
 
இதன்வழி,சிங்களப் பேரினவாத ஒடுக்குமுறை இல்லை என்று சொல்கிறீர்களென நாம் எடுப்பதற்காக உங்களது வாதத்தில் "காணப்படுவதற்குள் காணாததை"த் தேடிப் பார்ப்போம்.
 
இலங்கையை ஆளும் மகிந்தாவின் தலைமையை ஏற்று,அவருக்கு நன்றி சொலவும் உங்களால் முடிகிறது.இந்த நன்றி, புலிப் பாசிசத்தை அழித்ததென்பதுற்குவெனவும் சொன்னீர்கள்.அதுவும் பறுவாயில்லை.நீங்கள் ஜனநாயத்தின்மீதுகொண்டிருக்கும் பற்ருறுதியின்பொருட்டு இது சாத்தியமே.
 
ஆனால்,இலங்கையினது ஆளும் வர்க்கத்தால் காலாகாலமாக ஒடுக்கப்படும் இலங்கையின் சிறுபான்மை இனங்கள் தம்மைத் தமிழர்களாகவும்,முஸ்லீம்களாகவும்,மலையகத்தவர்களாகவும் அடையாளப்படுத்துவதை மறுத்து, இலங்கையர்களெனச் சொல்வது எங்ஙனம் சாத்தியமாகிறது?
 
இலங்கை அரசினது சிங்கள இனவாமும் அதன் இனவொடுக்குமுறையும் சட்டரீதியாக நியாயப்படுத்தப்பட்டு, இலங்கையில் தமிழ்பேசும் மக்களை அது வேட்டையாடி வரும்போது,இந்த இனவொடுக்குமுறைக்கும் சாதியவொடுக்குமுறைக்கும் நீங்கள் கருத்துக்கட்டும் தளமே உங்களைச் சந்தர்ப்பவாதியாகவும்,மகிந்தாவுக்கு வக்கலாத்துவேண்டிப் பிழைக்கும், பிழைப்பு வாதியாகவும் நமக்குள் உங்களை அறிமுகஞ் செய்கிறது.
 
இலங்கைப் பேரினவாத அரசு, தமிழ்பேசும் மக்களை இனரீதியாக ஒடுக்கியபோது,அது ஒருபோதும் சாதி பார்த்துக் குண்டுவீசவில்லை,எறிகணைவீசவில்லை.பொதுவாகத்"தமிழினம்"எனும் அடையாளத்தின் வழி அது தனக்கான நியாய யுத்தத்தைச் செய்தது.இப்போதும், செய்து வருகிறது.இதை நீட்டி முடக்கத்தேவையில்லை.வன்னி நிலைமையும்,தமிழ்சமுதாயத்தின் குடிசார்நிலைமையும் இதைச் சொல்லும்.என்றபோதும், நீங்கள் "தமிழர்கள்-இலங்கைத் தமிழர்கள்"என்பதைவிட"நாம் எல்லோரும் இலங்கையர்கள்"என்றும், ஒற்றுமையுடன் நாட்டைக்கட்டியெழுப்ப வேண்டுமென்கிறீர்கள்.இங்கு, நாடு என்பதற்குள் அனைத்துப் பிரச்சனையும் முடிந்துவிட்டாதாக அர்த்தமாகிறது(வர்க்கப் போராட்டுத்துக்குள் சாதியப் போராட்டமும் உள்வாங்கப்பட்டு, நடாத்தப்படுவது நியாயமென மரபு மார்க்சியர்கள் சொல்லும்போது உங்களால் ஏற்க முடியாது "தலித்துவ"அடையாளத்துக்கு உங்களை இழுத்துச் செல்கிறது.இது, கவனத்துக்குரியது).
 
இதையே தாழ்த்தப்பட்ட மக்களுக்குப் பொருத்தி"ஒன்றுபட்டு" தமிழ்ச் சமுதாயத்தின் சுயநிர்ணயவுரிமையை, சிங்களப் பேரினவாதம் ஏற்கச் செய்வதற்கான அரசியல் போராட்டத்தைச் செய்ய மறுக்கிறீர்கள்.அங்கே,சாதியம் என்பது ஒருபோதும் ஒன்றுபட்டு அகற்றமுடியாது,அது மறைமுகமாக இன்னும் ஒடுக்குகிறது,புலியினது அழிவில் நேரடியாகவும் ஒடுக்குகிறதென்கிறீர்கள்.இது சரி.
 
ஆனால்"நாம் எல்லோரும் இலங்கையர்கள்"என்று "தமிழ் அடையாளம்" மறுத்துச் செயற்படச் சொல்லும்போது,இலங்கை அரசு மறைமுகமாகவோ அன்றி நேரடியாகவோ இனவொடுக்குமுறையைச் செய்யவில்லையென இதன்மூலம் சொல்கிறீர்கள்.அதனால்தாம் மகிந்தாவே ஆட்சிக்கு மீள வரவேண்டுமென அவருக்காகப் பிரச்சாரஞ் செய்கிறீர்கள்.
 
 
தலித்துவப் "போராளி" சுகன் பாணியில் உங்களைக் கட்டுடைத்தால்:
 
1: தலித்துவ அடையாளம் அவசியம்:தமிழ்ச் சமுதாயத்துள் சாதியவொடுக்குமுறை நிலவுகிறது. எனவே, சாதியத்தை முறியடிக்க,
 
2: தமிழர்கள் என்ற அடையாளம் தேவையில்லை: எனவே, தமிழ்பேசும் மக்களுக்கு இலங்கையில் இனவொடுக்குமுறை இல்லை என்கிறீர்கள்,
 
3: மகிந்தா இன்னுமொரு முறை வருவது நல்லது:அங்ஙனமென்றால்,இதுவரை மகிந்தா செய்த அரசியல் நியாயமானது,வன்னியுத்தத்தில் கொல்லப்பட்ட அனைத்துச் சாதிகளையும் சேர்ந்த தமிழ்பேசும் மக்கள் மகிந்தாவால் கொல்லப்படவில்லை என்றாகிறது,
 
4: மகிந்தாவை அதாரிப்பதன் உங்கள் தெரிவில்: மகிந்தா தலைமையிலான இலங்கை அரசு,இதுவரையான தமிழ்ப் பிரதேசங்களை முற்றுகையிட்டு,அனைத்துக் குடிசார்வுரிமைகளையும் சிதைத்துத் தமிழ்ச் சமுதாயத்தின் சமூக சீவியத்தையே இராணுவக்கட்டுப்பாட்டுக்குள் வைத்தபடி, ஒரு இனத்தைத் தொடர்ந்து கண்காணித்து அதை உளவதைக்குள் தள்ளுவதும் தலித்துவ விடுதலைக்கு அவசியம் என்றாகிறது.
 
5: இத்தகைய அரசு,புலிகளை மட்டுமேதாம் அழித்தது.மக்களையோ அன்றி அவர்களது வாழ்வாதாரங்களையே அழிக்கவில்லை என்பதும் மகிந்தாவுக்குச் சொல்லும் நன்றியுள் அடங்குகிறது.
 
 
இப்படி "அற்புதமான" கருத்துக்களை நீங்கள் சொல்வதுவரை "உங்கள் தலித்துவ"ச் சமூக மேம்பாட்டு முன்னணியும் இலங்கை அரசியலில் தமிழ்பேசும் மக்களுக்குக் குழி தோண்ட வந்து நிற்கிறது.
 
...ம்... நடாத்துங்கோ! நாலு வார்த்தை நாம் பேசுவதற்குகந்த சூழல் இப்போதிருக்கிறதென்ற தொனியுள் மகிந்தா மாமாவுக்குக் குடை பிடித்து...
 
ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
21.12.2009

Keine Kommentare: